மாயமான வாலிபர் மர்ம சாவு- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


மாயமான வாலிபர் மர்ம சாவு- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2021 7:47 PM GMT (Updated: 22 Nov 2021 7:47 PM GMT)

நெல்லை அருகே மாயமான வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லை:
நெல்லை அருகே மாயமான வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

வாலிபர் மாயம்

நெல்லை அருகே உள்ள மேலசெவல் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் பாரதி லிங்கம் (வயது 19). டிப்ளமோ முடித்துள்ளார். மேலும் அவர் அங்கு பகுதி மின் வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகவும் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

மர்ம சாவு

இந்த நிலையில் மகாலிங்கத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், உங்கள் மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவரை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து செல்லுமாறு தெரிவித்தார்.
இதனால் அதிர்சி அடைந்த மகாலிங்கம் உள்ளிட்டவர்கள் திண்டிவனம் சென்று பாரதி லிங்கத்தை அழைத்து வந்தனர். அப்போது அவரது உடம்பில் காயங்கள் இருந்ததாம். இதனையடுத்து அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பாரதிலிங்கம் பரிதாபமாக உயிர் இழந்தார்.

போராட்டம்

இதனை அறிந்த மகாலிங்கம் மற்றும் உறவினர்கள் பாரதிலிங்கம் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடம்பில் காயங்கள் இருப்பதால் அவரை சிலர் அடித்து கொலை செய்து இருப்பதாகவும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, நேற்று ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர், மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் முத்துப்பாண்டியன், ஒன்றிய தலைவர் யாபேஸ் பாண்டியன், தமிழர் விடுதலைக் களம் மாவட்ட தலைவர் சுரேஷ் பாண்டியன், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெகன் பாண்டியன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே பாரதி லிங்கத்தை ஒரு இளம்பெண்ணின் தரப்பினர் தாக்கியதில் அவர் இறந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசார் அந்த பெண் தரப்பில் விசாரணை நடத்தியபோது வெறிநாய் கடித்து பாதிப்பு ஏற்பட்டதாக கூறி உள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story