‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 23 Nov 2021 4:38 PM GMT (Updated: 23 Nov 2021 4:38 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி வருவாய் கிராமத்தில் உள்ள வடிகால் வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வழிந்தோட வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
- வேதைகுமரன்முத்து, நாகை.

சுகாதார சீர்கேடு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த பரசலூர் ஊராட்சியில் மேலமுக்குட்டு அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளில் மழைநீர் தேங்கி சாக்கடை போல் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பைகளில் இரை தேட வரும் கால்நடைகள் சாலையில் அங்கும், இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.
-பொதுமக்கள், பரசலூர்.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம்-திருவாரூர் இடையோன சாலையில் அதிக அளவில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இந்த மாடுகள் இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வாகனங்களில் வருபவர்கள் சாலை நடுவே மாடுகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
- பொதுமக்கள், திருவாரூர்.

குண்டும், குழியுமான சாலை

நாகை மாவட்டம் நாகூர் தெற்கு தெருவில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவீக்தீன், நாகூர்.

மின்கம்பம் மாற்றப்படுமா? 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி கரக்குடி தெருவில் வீடுகளுக்கு இடையே ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் வீட்டின் அருகே தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ? என அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளுக்கு இடையே சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும். 
-பொதுமக்கள், வலங்கைமான்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த அரங்கக்குடி மெயின் ரோட்டில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் நீர்த்தேக்கதொட்டி அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-காஜாமைதீன், செம்பனார்கோவில்.

Next Story