அடையாள அட்டை வழங்கக்கோரி விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


அடையாள அட்டை வழங்கக்கோரி விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 5:36 PM GMT (Updated: 23 Nov 2021 5:36 PM GMT)

தேசிய அடையாள அட்டை வழங்கக்கோரி விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரம்

காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் நுழைவு வாசல் முன்பு நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திரண்டு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்க கூட்டமைப்பின் தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலாளர் அய்யாக்கண்ணு, பொருளாளர் ராகுல், மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை,  செயலாளர் தமிழரசி, பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள்

தேசிய அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்து பல மாதங்களாக காத்துக்கிடக்கும் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பராமரித்து வரும் பெற்றோருக்கு அரசு உதவித்தொகையாக ரூ.1,000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர், இம்மனு மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் மாற்றுத்திறனாளிகள்  போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story