செஞ்சி அருகே திருமணம் ஆன ஓராண்டில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்


செஞ்சி அருகே திருமணம் ஆன ஓராண்டில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை  உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Nov 2021 6:06 PM GMT (Updated: 23 Nov 2021 6:06 PM GMT)

செஞ்சி அருகே திருமணம் ஆன ஓராண்டில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

செஞ்சி

வரதட்சணை கொடுமை

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தட்சிணாமூர்த்திக்கும், ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த தினகரன் மகள் அபிதா (வயது 23) என்பவருக்கும் கடந்த 26.10.2020 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தட்சிணாமூர்த்தியும், அவரது பெற்றோரும் வரதட்சணை கேட்டு அபிதாவை கொடுமைப்படுத்தியதாககவும் இதில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அபிதாவின் தாயார் சம்பூர்ணம்(55) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தட்சிணாமூர்த்தி, இவரது தந்தை ஆறுமுகம், தாய் மல்லிகா, தம்பி முருகன், அக்காள்கள் முத்துலட்சுமி, பாக்கியலட்சுமி ஆகியோர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் அபிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிண அறையில் வைக்கப்பட்டிருந்தது. இதை அறிந்து அங்கு வந்த அபிதாவின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அபிதாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். 

இதனால் செஞ்சி-திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி தாசில்தார் பழனி, துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சப்-கலெக்டர் விசாரணை

இதற்கிடையே அபிதாவின் தற்கொலை குறித்து திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத் நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் அவரது உத்தரவின் பேரில் அபிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைதுசெய்யக்கேரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் செஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story