சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனுக்கு அஞ்சலி செலுத்திய டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி


சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனுக்கு அஞ்சலி செலுத்திய டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
x
தினத்தந்தி 23 Nov 2021 7:49 PM GMT (Updated: 23 Nov 2021 7:49 PM GMT)

கொலை வெறி தாக்குதலின் போது காவல்துறையினர் தங்கள் உயிரை காக்க துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது என்று சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய பின்பு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

திருச்சி, நவ.24-
கொலை வெறி தாக்குதலின் போது காவல்துறையினர் தங்கள் உயிரை காக்க துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது என்று சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய பின்பு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
சப்-இன்ஸ்பெக்டர் கொலை
திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (வயது 50). கடந்த 20-ந்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆடு திருடர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதுதொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே தோகூரை சேர்ந்த மணிகண்டன் (19) மற்றும் 2 பள்ளி மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டி.ஜி.பி. அஞ்சலி
இந்த சம்பவம் நடந்த அன்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் பிரதமர் தலைமையில் 2 நாட்கள் நடைபெற்ற அகில இந்திய போலீஸ் டி.ஜி.பி. மாநாட்டில் கலந்து கொள்ள லக்னோ சென்று இருந்தார். மாநாடு முடிந்து தமிழகம் திரும்பிய அவர், சென்னையில் இருந்து நேராக திருச்சிக்கு வந்தார்.
பின்னர் அவர், திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே சோழமாநகரில் உள்ள பூமிநாதனின் வீட்டிற்கு நேற்று காலை சென்றார். அங்கு பூமிநாதனின் உருவப்படத்துக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
குடும்பத்தினருக்கு ஆறுதல்
பின்னர், சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் மனைவி கவிதா (45), மகன் குகன் (21) ஆகியோருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து நவல்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவர், சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கொலையாளிகளை 24 மணி நேரத்துக்குள் கைது செய்த திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசாரை பாராட்டினார்.
முன்னதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் வீட்டில், டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
வீரம், விவேகம் மிக்கவர்
வீரமரணம் அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனுக்கு தமிழக காவல்துறை வீரவணக்கம் செலுத்துகிறது. பூமிநாதன் ஏற்கனவே முதல்-அமைச்சர் பதக்கம் வாங்கியுள்ளார். மேலும் அவர் தீவிரவாத தடுப்பு கமாண்டோ பயிற்சி எடுத்தவர், சிறந்த வீரர். அவருடைய இறப்பு தமிழக காவல்துறைக்கு ஒரு பெரிய இழப்பு.
அவர் கடமை உணர்வுடன் பணியாற்றி உள்ளதுடன், வீரத்துடனும், விவேகத்துடனும் தான் தனது பணியை செய்துள்ளார். குறிப்பாக இது சாதாரண ஆடு திருட்டுதானே என்று அவர் விட்டுவிடவில்லை. 15 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று 3 பேரையும் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர்கள் வைத்து இருந்த அரிவாளையும் பறிமுதல் செய்து பாதுகாப்பாகத்தான் இருந்துள்ளார்.
முதல்-அமைச்சருக்கு நன்றி
பின்னர் 3 பேரின் உறவினர்களை செல்போனில் அழைத்து இதுபற்றி கூறியுள்ளார். குறிப்பாக முக்கிய குற்றவாளியின் தாயாரை அழைத்து, உங்கள் மகன் ஆடு திருடிவிட்டு சிக்கியுள்ளான், காலையில் போலீஸ் நிலையத்துக்கு வந்து அழைத்துச்செல்லுங்கள் என்று சட்ட விதிப்படி தகவலையும் தெரிவித்துள்ளார்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் அரிவாளால் அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். வீரமரணமடைந்த பூமிநாதன் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர், நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்க ஆணையிட்டுள்ளார். மேலும் அவரது மகனுக்கு அரசு வேலை வழங்குவதாகவும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு தமிழக காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
சவாலான துறை
காவல்துறை மீது தாக்குதல் நடைபெறுவது புதிதல்ல. 1856-ம் ஆண்டில் இருந்தே காவல்துறை மீது தாக்குதல் நடந்து கொண்டிருப்பது வழக்கமான ஒன்றுதான். காவல்துறை என்பது சவாலான துறை. காவல்துறையில் பணியாற்றும்போது, உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் போவது எல்லாம் இயற்கைதான். அதை எப்படி எதிர்கொள்வது என்பது தான் முக்கியம்.
ஆனால் பூமிநாதன் தைரியமாக குற்றவாளிகளை பிடித்து தனது கடமையை செய்து உயிர்த்தியாகம் செய்துள்ளாார். இதுபோன்று தனிமையான இடத்துக்கு ரோந்து பணிகள் மேற்கொள்ளும்போது, காவல் அதிகாரிகள் தங்கள் கைத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகள் மட்டத்தில் இரண்டு மாத பயிற்சி நிறைவு பெற்றுள்ளது.
துப்பாக்கியை பயன்படுத்தலாம்
இதுபோன்று பணியின்போது, காவல்துறையினர் மீது உயிரை பறிக்கக்கூடிய அளவுக்கு கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டால், காவல்துறையினர் தங்கள் உயிரை காப்பாற்ற ஆயுதப்பிரயோகம் செய்யலாம் என்று சட்டத்தில் விதி உள்ளது. எனவே காவல்துறையினர் ரோந்து பணியின்போது கைத்துப்பாக்கியை எடுத்துச்செல்லவேண்டும். எதிரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது துப்பாக்கியை பயன்படுத்த தயங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்.
சிறுவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு ஏற்கனவே சிறார் கிளப் என்ற அமைப்பு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் தற்போது உள்ள கிளப்புகளுடன் கூடுதலாக 52 சிறார் கிளப் ஏற்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதுபோல் மாவட்டம் முழுவதும் இந்த கிளப்கள் உள்ளன.
ஆதாரம் உள்ளது
அதன்மூலம் சிறுவர்களுக்கான விளையாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி, அவர்களை நல்வழிப்படுத்தி வருகிறோம். இருப்பினும் அதையும் மீறி இதுபோன்ற செயல்களில் சிறுவர்கள் ஈடுபடும் சம்பவம் நடைபெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட 3 பேர் தான் குற்றச்செயலில் ஈடுபட்டது என்பதற்கான வீடியோ உள்ளிட்ட 100 சதவீத ஆதாரம் உள்ளது. ஆதாரங்களின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story