252 பயனாளிகளுக்கு ரூ.69¼ லட்சத்தில் நலத்திட்ட உதவி- அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்


252 பயனாளிகளுக்கு ரூ.69¼ லட்சத்தில் நலத்திட்ட உதவி- அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 23 Nov 2021 8:42 PM GMT (Updated: 23 Nov 2021 8:42 PM GMT)

தென்காசியில் 252 பயனாளிகளுக்கு ரூ.69¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி:
தென்காசியில் 252 பயனாளிகளுக்கு ரூ.69¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார். 

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ் வரவேற்று பேசினார். 
விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 66 பேருக்கு ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 28 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் தோட்டக்கலை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 252 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 22 ஆயிரத்து 913 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-

ரூ.2 ஆயிரத்து 650 கோடி

தமிழக அரசு பொதுமக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் தி.மு.க. அரசு வரவேண்டும் என்று வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். எனவே இந்த மக்களின் கண்களில் கண்ணீர் வருவதை முதல்-அமைச்சர் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார். அதனை பொறுக்கவும் மாட்டார். அவர்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக 66 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு துறைகள் சார்பிலும் நலஉதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதத்திற்காக மத்திய அரசிடம் ரூ.2 ஆயிரத்து 650 கோடி நிவாரணம் கேட்டு உள்ளோம். 
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, தி.மு.க. நகர செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனிதுரை, ராமையா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story