இளைஞர்கள், சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது- போலீசார் அறிவுரை


இளைஞர்கள், சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது- போலீசார் அறிவுரை
x
தினத்தந்தி 24 Nov 2021 6:46 AM GMT (Updated: 24 Nov 2021 6:46 AM GMT)

இளைஞர்கள், சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்று மருந்து கடை அதிபர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மருந்து கடை அதிபர்களுடன் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் ஆலோசனையின் பேரில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் செந்தில்குமார், டாக்டர் கண்ணன் ஆகியோர் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்கள். ஏராளமான மருந்து கடை அதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

போதை தரக்கூடிய மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. இளைஞர்கள், சிறுவர்களுக்கு போதை தரும் மாத்திரைகளை விற்பதை தவிர்க்க வேண்டும். தூக்க மாத்திரைகளையும் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கொடுக்க கூடாது.

போதை மாத்திரைகளை உரிய பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யும் மருந்து கடைகளின் விவரத்தை போலீசுக்கு தெரிவிக்க வேண்டும். போதை மாத்திரைகளை கேட்டு யாராவது மிரட்டினால் அது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மருந்து கடைகளின் முகப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போதை மருந்து, மாத்திரைகளை உரிய பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டதாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story