மழைநீர்சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


மழைநீர்சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2021 2:04 PM GMT (Updated: 24 Nov 2021 2:04 PM GMT)

மழைநீர்சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

குடிமங்கலம் பகுதியில் மழைநீர்சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைநீர் சேகரிப்பு
கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுவதும், மழைக்காலங்களில் அதிக தண்ணீரால் இழப்பை சந்திப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு துளி மழைநீரையும் முறையாக சேமிப்பதன் மூலம் மழைநீரை முழுமையான ஆக்க சக்தியாக மாற்ற முடியும். அந்த வகையில் மழைநீரை பூமிக்குள் செலுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்கென அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையிலும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் அலட்சியத்தால் அது பயனில்லாமல் போவது வேதனையளிப்பதாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டிருந்தால் வீதிகளில் வழிந்தோடும் மழைநீரில் அளவு மிகக்குறைவானதாகவே இருக்கும். ஆனால் பெரும்பாலான கட்டிடங்களில் இந்த மழைநீர் சேமிப்பு அமைப்பு காட்சிப் பொருளாகவே உள்ளது. அத்துடன் கிராமப்பகுதிகளில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து பூமிக்குள் அனுப்பும் வகையில் தனி நபர் உறிஞ்சு குழிகள், கழிவுநீர்க்கால்வாய்களின் முடிவில் கழிவுநீரை சுத்திகரித்து பூமிக்குள் அனுப்பும் கட்டமைப்புகள் போன்றவற்றை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது
மேம்படுத்த நடவடிக்கை
சாலையோர மழைநீர் வடிகால்களில் சிறிய அளவிலான தடுப்பணைகள் அமைத்தல், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றுதல் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதுபோல மழைநீர் வடிகால்களில் குறிப்பிட்ட இடங்களில் மழைநீரை பூமிக்குள் அனுப்பும் வகையில் 3 மீட்டர் நீள, அகலத்தில் 1½ மீட்டர் ஆழத்தில் ஜல்லிக்கற்கள் பரப்பி மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது.
ஆனால் இது போன்ற மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் முறையான திட்டமிடுதல் இல்லாமல் கட்டப்படுவதால் பயனற்றுப் போகிறது. அந்த வகையில் கொங்கல்நகரம் பொட்டையம்பாளையம் சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ 34 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மழைநீர் சேமிப்பு அமைப்பு உயரமாகக் கட்டப்பட்டுள்ளதால் மழைநீர் சேகரிக்க வழியில்லாமல் கிடக்கிறது.எனவே குடிமங்கலம் பகுதியில் அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வறட்சி பகுதியாக அறியப்பட்டுள்ள குடிமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், விவசாய மேம்பாட்டுக்கும் உதவியாக இருக்கும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.


Next Story