63 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


63 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு  நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 24 Nov 2021 3:25 PM GMT (Updated: 24 Nov 2021 3:25 PM GMT)

நாகையில் அமைப்புசாரா ெதாழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை நலவாரியத்தலைவர் பொன்குமார் வழங்கினார்.

நாகப்பட்டினம்:
நாகையில் அமைப்புசாரா ெதாழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை நலவாரியத்தலைவர் பொன்குமார் வழங்கினார். 
கலந்தாய்வு கூட்டம் 
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு கட்டுமான  தொழிலாளர்கள் நல வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் கலந்துகொண்டு 63 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ்  ஆண்டுக்கு 25 ஆயிரம்  தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட உள்ளது. தொழிலாளர் வாரியத்தில் ஆன்லைன் பதிவு முறையை எளிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
தடுப்பூசி செலுத்த வேண்டும்
கட்டுமான தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் விபத்துக்களால் இறப்பு நேரிடும்போது அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 லட்சம் தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) (நாகப்பட்டினம், திருவாரூர்) பாஸ்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், தொழிலாளர் உதவி ஆணையர் ஸ்ரீதர  மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story