சரிவர பணி செய்யாத போலீசார்மீது கடும் நடவடிக்கை


சரிவர பணி செய்யாத போலீசார்மீது கடும் நடவடிக்கை
x
சரிவர பணி செய்யாத போலீசார்மீது கடும் நடவடிக்கை
தினத்தந்தி 24 Nov 2021 3:45 PM GMT (Updated: 24 Nov 2021 3:45 PM GMT)

சரிவர பணி செய்யாத போலீசார்மீது கடும் நடவடிக்கை

கோவை

கோவை மாநகர புதிய  போலீஸ் கமிஷனர்   பிரதீப் குமார் கூறியதாவது:-
கோவை நகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த போலீஸ்நிலையங்களில் பழைய குற்றவாளிகளை கண்காணிக்கவும், சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தால் அவர்களின் பட்டியலை வைத்து, தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபடுகிறார்களா? என்று ரோந்து செல்லும்போது ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை நகரில் வீடு புகுந்து திருடும் குற்றங்களை தடுக்க இரவு ரோந்து தீவிரப்படுத்தப்படும்.

நகரில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற குற்றங்கள் ஆய்வு செய்யப்படும். குற்றவாளிகள் பிடிபடாத வழக்குகள், மீட்பு சதவீதம், தற்போது நடைபெற்ற வழக்குகள் என்று ஒவ்வொரு போலீஸ்நிலையம் வாரியாக ஆய்வு செய்யப்படும்.
போலீசார் தங்களது பணியை சரியான முறையில் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்கள் மீது புகார் வந்தால், உரிய விசாரணை நடத்தி பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.

நகரில் சீரான போக்குவரத்துக்கும், விபத்துகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எந்தந்த பகுதிகளில் விபத்துகள் அதிகம் நடைபெறும் என்று ஆய்வு செய்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். தொடர்ந்து மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.

மாணவிகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் போலீஸ், சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். போக்சோ வழக்கில் கைதானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். குற்றவழக்குகளில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய தாமதம் செய்யக்கூடாது என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story