மோகனூர் பஸ் நிலையத்தில் 'நாங்களும் ரவுடி தான்' என மிரட்டிய 3 பேர் கைது


மோகனூர் பஸ் நிலையத்தில் நாங்களும் ரவுடி தான் என மிரட்டிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2021 4:19 PM GMT (Updated: 24 Nov 2021 4:19 PM GMT)

மோகனூர் பஸ் நிலையத்தில் 'நாங்களும் ரவுடி தான்' என மிரட்டிய 3 பேர் கைது

மோகனூர்:
மோகனூர் பகுதியில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையத்தில் 3 பேர் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் நடிகர் வடிவேலு பாணியில் 'நாங்களும் ரவுடிகள் தான்' என கூறி கொண்டும், பஸ் கண்ணாடியை உடைத்தால் தான் ரவுடி ஆக முடியும் என பேசி கொண்டதாக தெரிகிறது. இதை பார்த்த போலீசார் 3 பேரையும் எச்சரித்ததுடன், அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
ஆனால் போலீசாரின் பேச்சை கண்டு கொள்ளாத 3 பேரும் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் பேசியும், பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மூங்கில்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் மகன் பாக்கியராஜ் என்ற பாண்டியன் (வயது 35), தாழம்பாடியை சேர்ந்த சுப்ரமணி மகன் பிரசாந்த் (22) மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை கார்குடியை சேர்ந்த சாமியய்யா மகன் சொர்ணலிங்கம் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story