வேலூர் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை


வேலூர் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 24 Nov 2021 5:22 PM GMT (Updated: 24 Nov 2021 5:22 PM GMT)

வேலூர் அருகே நடந்த வாலிபர் மர்மச்சாவில் திடீர் திருப்பமாக காதல் விவகாரத்தில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேலூர்

வேலூர் அருகே நடந்த வாலிபர் மர்மச்சாவில் திடீர் திருப்பமாக காதல் விவகாரத்தில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கூலித்தொழிலாளி

வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 55). இவரின் 2-வது மகன் சரண்ராஜ் (21). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சிவக்குமார் (38), குண்டு என்ற வில்சன் (35) ஆகியோர் தரப்புக்கும் இடையே நேற்றுமுன்தினம் காலை 9.30 மணி அளவில் தகராறு ஏற்பட்டது. அதில் ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மதியம் 12.30 மணி அளவில் அந்த பகுதியில் சாலையோரம் சரண்ராஜ் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். இதையடுத்த சரண்ராஜ் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 அடித்துக் கொலை

சாரணையில் சரண்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிவக்குமாரின் உறவினர் பெண்ணை சரண்ராஜ் காதலித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக சம்பவத்தன்று சரண்ராஜ் மற்றும் சிவக்குமார், வில்சன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் சிவக்குமார் மற்றும் வில்சன் ஆகியோர் சரண்ராஜை தாக்கி உள்ளனர். அதில் அவர் காயமடைந்து உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து சிவக்குமார் மற்றும் வில்சன் இருவரையும் கைது செய்துள்ளோம். மேலும் சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றி மேல் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.


Next Story