புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முற்றுகை


புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 24 Nov 2021 5:45 PM GMT (Updated: 24 Nov 2021 5:45 PM GMT)

புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் நிலையத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சேத்துப்பட்டு

புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் நிலையத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 கடன்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த மரக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவர், தனது மகள் திருமணத்துக்காக அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தனிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். 

கோவிந்தன் தான் கொடுத்த கடனை திருப்பி கேட்பதற்காக அய்யனாரின் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்ற அவர் கொடுத்த கடனை திருப்பி கேட்டு, அய்யனாரின் மனைவி வேண்டா, மகள் காவேரி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். 

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கோவிந்தன் திடீரென காவேரியின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

 போலீஸ் நிலையம் முற்றுகை

இதுகுறித்து பெரணமல்லூர் போலீசில் கடந்த வாரம் வேண்டா புகார் செய்தார். ஆனால் போலீசார் இதுநாள் வரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனத் தெரிகிறது. 

புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். 

மாலை 3 மணியளவில் தொடங்கிய முற்றுகை போராட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது. போலீஸ் நிலையத்தில் அதிகாரி இல்லாததால் போலீஸ் நிலையம் முன்பு மலைவாழ் மக்கள் வெகுநேரம் தரையில் அமர்ந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி வந்ததும், அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, கோவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார். 

இதையடுத்து அனைவரும் முற்றுைக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story