‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Nov 2021 7:16 PM GMT (Updated: 24 Nov 2021 7:16 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் முதல் மீமிசல் வரை கிழக்கு கடற்கரை சாலையில் காலை மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
பிரபா, புதுக்கோட்டை.
கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி கிராமத்தின் வழியாக கம்பெனிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இப்பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், ரோட்டில் நடந்து செல்லும் சிறுவர்கள் பெரிய வாகனங்களை கண்டதும் பீதியடைந்து ஓடி செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கனரக வாகனங்களை கிராமத்திற்குள் செல்லாமல் மாற்றுப்பாதையில் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
மல்லிகா, கரூர்.
ரேஷன் கடையை சூழ்ந்த வெள்ளம்
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூரில் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய பாசன ஏரி உள்ளது. இந்த ஏரி தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பி வழிந்து உபரிநீர் குடியிருப்புகளுக்கு புகுந்தது. மேலும், ரேஷன் கடையில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லதா, இனாம்குளத்தூர், திருச்சி.
கழிவுநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை 
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் சமுதாய கூட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் பின்புறமுள்ள கழிவுநீர் தொட்டி உடைந்த நிலையில் பல நாட்களாக உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று விடும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.
கிருபாகரன், புதுக்கோட்டை.
சுகாதாரமற்ற கழிப்பிடம்
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி 15-வது வார்டு கழிப்பிடம் சுகாதாரமற்று காணப்படுகிறது. மேலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இங்கு புதர்கள் வளர்ந்து உள்ளதால் விஷ ஜந்துகளின் நடமாட்டம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கழிப்பறையை சுகாதாரமாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருபா, கரூர்.
பன்றிகளால் சுகதார சீர்கேடு
திருச்சி, பிச்சாண்டார்கோவில் ஊராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் சகஜமாக சுற்றித்திரிவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேதவள்ளி, திருச்சி.
குப்பைகளை அகற்ற கோரிக்கை
திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட், சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகே செல்லும் வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதுடன், கழிவுநீர் தேங்கி நிற்காமல் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனபால், திருச்சி.
தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம்  இடங்கண்ணி மற்றும் அண்ணங்காரம்பேட்டை கிராமங்களில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள், உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி துர்நாற்றம் வீசி சுகாதாரகேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செண்பகலெட்சுமி, தா.பழூர்.

Next Story