தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை


தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Nov 2021 7:46 PM GMT (Updated: 24 Nov 2021 7:46 PM GMT)

துறையூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துறையூர், நவ.25-
துறையூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆசிரியர்
கரூர் மாவட்டம் காமராஜர் நகரில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 42). இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயந்தி (42) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் (75) என்பவரது வீட்டுக்கு சரவணன் நேற்று மதியம் தனியாக வந்தார். நடராஜன் உடல் நலம் சரியில்லாமல் கரூரில் உள்ளார்.
தூக்கில் தொங்கினார்
துறையூரில் உள்ள மாமனார் வீட்டில் யாரும் இல்லை. இந்த நிலையில் வீட்டுக்குள் சென்ற சரவணன் மாலை வரை வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர்  வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, சரவணன் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து அப்பகுதியினர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில்  இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆசிரியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரவணன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்த மாணவி படித்த பள்ளி
கரூரில் பிளஸ்-2 மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்வதாக  கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவி படித்த அதே பள்ளியில் சரவணன் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் இறப்பதற்கு முன்பு தனது மனைவி மற்றும் மாணவ-மாணவிகளுக்கு உருக்கமாக டைரியில் எழுதி வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் கரூர் மற்றும் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story