சேலம் ரெயில்வே கோட்டத்தில் பயணிகளிடம் கடந்த 7 மாதங்களில் ரூ.4.93 கோடி அபராதம் வசூல்-முதுநிலை வணிக மேலாளர் தகவல்


சேலம் ரெயில்வே கோட்டத்தில் பயணிகளிடம் கடந்த 7 மாதங்களில் ரூ.4.93 கோடி அபராதம் வசூல்-முதுநிலை வணிக மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2021 9:33 PM GMT (Updated: 24 Nov 2021 9:33 PM GMT)

சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த 7 மாதங்களில் விதிகளை மீறிய பயணிகளிடம் ரூ.4.93 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம்:
சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த 7 மாதங்களில் விதிகளை மீறிய பயணிகளிடம் ரூ.4.93 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் சோதனை
கொரோனா பரவல் குறைந்ததால் நிறுத்தப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 24 ரெயில் நிலையங்களிலும் டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம் செய்தல், முககவசம் அணியாதது, புகை பிடித்தல் உள்ளிட்ட விதிகளை மீறும் பயணிகளை அதிகாரிகள் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் மேற்பார்வையில் முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் 34 குழுக்கள் அமைக்கப்பட்டு ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ரூ.4.93 கோடி அபராதம்
இதுகுறித்து முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறியதாவது:-
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் டிக்கெட் பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தல், புக்கிங் இல்லாமல் சரக்குகளை எடுத்து செல்லுதல் என விதிகளை மீறியதாக 87 ஆயிரத்து 293 பேர் கண்டறியப்பட்டு அவர்களிடம் 4 கோடியே 93 லட்சத்து 51 ஆயிரத்து 858 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இரட்டை ரெயில் பாதை
அதேபோல, முககவசம் அணியாத 2 ஆயிரத்து 702 பேரிடம் ரூ.13 லட்சத்து 51 ஆயிரமும், புகை பிடித்தலால் ரூ.5 ஆயிரத்து 800-ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2020) ஏப்ரல்- அக்டோபர் மாதங்களில் ரூ.3.73 கோடி அபராதம் வசூலிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்த நிலையில் தற்போது 35 சதவீதம் கூடுதலாக ரூ.4.93 கோடி வசூல் செய்துள்ளோம். கொரோனா தொற்று குறைந்ததால் தற்போது சிறப்பு ரெயில்கள் என்ற இல்லாமல் பழையபடி ரெயில் சேவை தொடங்கியுள்ளது. கட்டணமும் குறைந்துள்ளது. இதனால் ரெயில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. ரெயில் பயணிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். விதிகளை யாரும் மீறக்கூடாது.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 5-வது நடைமேடையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சேலம்-மேட்டூர் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story