கெங்கவல்லியில் மாயமான மாணவன் பிணமாக மீட்பு-விளையாடும் போது தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து இறந்த பரிதாபம்


கெங்கவல்லியில் மாயமான மாணவன் பிணமாக மீட்பு-விளையாடும் போது தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 24 Nov 2021 9:33 PM GMT (Updated: 24 Nov 2021 9:33 PM GMT)

கெங்கவல்லியில் மாயமான மாணவன், விளையாடும் போது தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து இறந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. அந்த மாணவனின் உடலை போலீசார் மீட்டனர்.

கெங்கவல்லி:
கெங்கவல்லியில் மாயமான மாணவன், விளையாடும் போது தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து இறந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. அந்த மாணவனின் உடலை போலீசார் மீட்டனர்.
மாணவன் மாயம்
கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (வயது 50). இவருடைய பேரன் புகழ் 4-ம் வகுப்பு படித்து வந்தான். 
கடந்த 19-ந் தேதி மாலை 5 மணி அளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் புகழ், திடீரென்று காணாமல் போனான். அவனை அவருடைய பாட்டி மற்றும் குடும்பத்தினர் பல்ேவறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 
இதையடுத்து தனது பேரன் மாயமானது குறித்து வெள்ளையம்மாள் கெங்கவல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாணவன் மாயமானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் நேற்று காலை வெள்ளையம்மாள் வீட்டின் அருகே துரைசாமி என்பவரின் வீட்டின் தரை மட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனடியாக துரைசாமி அந்த தொட்டியை பார்த்த போது, அதில் சிறுவன் புகழின் உடல் சிதைந்து பிணமாக கிடந்தது தெரியவந்தது.
 இது குறித்து தகவல் கிடைத்து அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று வீட்டின் அருகே மாணவன் புகழ் விளையாடி கொண்டிருக்கும் போது, கால்தவறி தரைமட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
மேலும் அந்த தொட்டி பல மாதங்களாக உபயோகம் இல்லாமல் இருந்த நிலையில், அதில் தேங்கி நின்ற தண்ணீரில் தவறிவிழுந்த சிறுவன் இறந்து உடல் துர்நாற்றம் வீச தொடங்கிய போது தான் அவன் இறந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story