ஓமலூர் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் மறியல்-தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை


ஓமலூர் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் மறியல்-தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 24 Nov 2021 9:33 PM GMT (Updated: 24 Nov 2021 9:33 PM GMT)

ஓமலூர் அருகே வீட்டுமனை பட்டாகேட்டு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் அருள்பிரகாஷ் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஓமலூர்:
ஓமலூர் அருகே வீட்டுமனை பட்டாகேட்டு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் அருள்பிரகாஷ் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
வீட்டு மனைப்பட்டா
ஓமலூரை அடுத்த தும்பிபாடி ஊராட்சி ரெட்டியூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் வீட்டு மனைபட்டா கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள சுமார் 5 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்கிடையே 17 பேருக்கு மட்டுமே வீட்டு மனைபட்டா வழங்க இருப்பதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.
சாலைமறியல்
இதையடுத்து கிராம மக்கள் ஓமலூர் தின்னப்பட்டி சாலையில் ரெட்டியூர் பாலம் அருகில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் மண்எண்ணெய் கேனுடன் சாலைமறியலில் இருந்தார்.
தகவல் அறிந்த காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ், தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கலைந்து சென்றனர்
பேச்சுவார்த்தையின் போது, அனைவரும் புதிதாக மனு கொடுக்கவும், தகுதியுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்தார். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே ஏழை,எளிய மக்களுக்கு பட்டா வழங்க உள்ள இடத்தினை தாசில்தார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story