கட்டிட மேஸ்திரி கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி - நண்பர்கள் 2 பேர் கைது


கட்டிட மேஸ்திரி கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி - நண்பர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2021 4:57 AM GMT (Updated: 25 Nov 2021 8:08 AM GMT)

மாரண்டஅள்ளி அருகே கட்டிட மேஸ்திரியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே கட்டிட மேஸ்திரியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கட்டிட மேஸ்திரி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெரியதோரணபெட்டம்  பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது42). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு மாரண்டஅள்ளி அருகே ராசிக்குட்டை பகுதியில் பெரிய தோரணபெட்டத்தை சேர்ந்த நண்பர்கள் செல்வராஜ் (40), சண்முகம் (41) ஆகியோருடன் மது அருந்தி கொண்டிருந்தார். 
அப்போது செல்வராஜ், குணசேகரனிடம் கொடுத்த பணத்திற்கு மது வாங்காமல் குறைவாக வாங்கி வந்ததாக கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், சண்முகம் ஆகியோர் பீர் பாட்டிலை உடைத்து குணசேகரனின் கழுத்தை அறுத்தனர். இதனால் அவர் அலறி துடித்தார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். 
2 பேர் கைது
பின்னர் அவர்கள் செல்வராஜை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாரண்டஅள்ளி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். 
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், சண்முகம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மது வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர்கள் 2 பேரும் கட்டிட மேஸ்திரியை கழுத்து அறுத்தார்களா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story