மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி


மாடுகளுக்கு கோமாரி நோய்  தடுப்பூசி
x
தினத்தந்தி 25 Nov 2021 11:26 AM GMT (Updated: 25 Nov 2021 11:26 AM GMT)

கோமாரி நோய் தடுப்பூசி

உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதன் உபதொழிலான ஆடு மாடு கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடை வளர்ப்பு நாள்தோறும் வருமானத்தை அளிப்பதுடன் இயற்கை உரங்கள் தயாரிப்பதற்கும் உறுதுணையாக உள்ளது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கால்நடைகளை நோய் தாக்கும் அபாயம் நிலவியது. அதைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் உடுமலை பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது
 உடுமலையில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 1ந் தேதியில் இருந்து இதுவரை 52 ஆயிரம் பசு மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும். மேலும் விடுபட்ட கால்நடைகளுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த பணிக்காக  9 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
தோட்டங்களுக்கு சென்று
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிராம ஊராட்சி மற்றும் பால் சேகரிப்பு மையங்கள் மூலம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி குழுக்கள் மூலம் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதால் முகாமிற்கு கொண்டு வர இயலாத கால்நடைகளுக்கு விவசாயிகளின் வீடுகள் அல்லது தோட்டங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story