தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் மின்னணு முறையில் வாரிசு நியமிக்கும் திட்டம்


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் மின்னணு முறையில் வாரிசு நியமிக்கும் திட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2021 1:09 PM GMT (Updated: 25 Nov 2021 1:09 PM GMT)

சென்னை தெற்கு மண்டல வைப்பு நிதி கமிஷனர் பி.ஹங்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுதந்திர தினத்தின் 75-வது பொன் விழா ஆண்டினை கொண்டாடும் இந்த வேளையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மின்னணு முறையில் வாரிசு பெயரை பதிவேற்றம் செய்யும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இ-சேவை இணையதளம் மூலமாக மின்னணு ‘நாமினேசனை' சந்தாதாரர்கள் சமர்ப்பிக்கலாம். சந்தாதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள், ‘வாரிசு'கள் புகைப்படம் மற்றும் ஆதார் தொடர்பான விவரங்களை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சென்னை தெற்கு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 9 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். எங்களுடைய சந்தாதாரர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தரமான சேவை வழங்கவேண்டும் என்று உறுதி பூண்டுள்ளோம். சந்தாதாரர்கள், நிறுவனங்களின் துடிப்பான ஆதரவு இல்லாமல் இது சாத்தியம் இல்லை. அனைத்து நிறுவனங்களும், தங்களுடைய ஊழியர்களுக்கு மின்னணு முறையில் ‘நாமினேசன்' தாக்கல் செய்வது தொடர்பாக அறிவுறுத்த வேண்டும். மேலும் இதற்காக உதவி செய்யவேண்டும். மின்னணு நாமினேசனுக்காக குழு அமைக்கப்படும். இந்த குழு கேட்டுக்கொண்டால், முக்கிய நிறுவனங்களில் பார்வையிட சென்று உதவியும் செய்யும். இதுதவிர அலுவலக வளாகத்திலும் ஒரு குழு, சந்தாதாரர்களுக்காக செயல்படும். வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் எங்களுடைய சந்தாதாரர்களில் 50 சதவீதம் பேர் மின்னணு ‘நாமினேசன்' வசதியை பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story