மலை மீது ஏறி சென்ற பக்தர் மூச்சுத் திணறி சாவு


மலை மீது ஏறி சென்ற பக்தர் மூச்சுத் திணறி சாவு
x
தினத்தந்தி 25 Nov 2021 4:05 PM GMT (Updated: 25 Nov 2021 4:05 PM GMT)

திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை மீது ஏறி சென்ற பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை மீது ஏறி சென்ற பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

தடையை மீறிய பக்தர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 19-ம் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சியளிக்கும். 

நேற்று 6-வது நாளாக மகா தீபம் சுடர்விட்டு எரிந்து காட்சி அளித்தது. மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசிக்க மலை மீது ஏறி செல்லக்கூடாது, என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

 இருப்பினும், பக்தர்கள் பலர் தடையை மீறி மலை ஏறி சென்று தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்தநிலையில் சேத்துப்பட்டு தாலுகா கங்காபுரம் கிராமத்தை சேர்ந்த துரை (வயது 30) என்பவர் நேற்று  மாலை தடையை மீறி மலை மீது ஏறி சென்றுள்ளார். மலை ஏறும் அனுபவம் இல்லாததால் அவர் மகாதீபம் ஏற்றப்படும் மலை உச்சி அருகே வரை சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து கீேழ விழுந்தார். இதையடுத்து அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

நேற்று மாலை மலையில் இருந்து திருப்பணி ஊழியர்கள் கீழே இறங்கி வரும் வழியில் துரை பிணமாக கிடந்ததை பார்த்து திருவண்ணாமலை டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் மலை ஏறி சென்று மலையின் உச்சியில் உள்ள 7 சுனை என்ற பகுதியில் இறந்து கிடந்த துரையின் பிணத்தை மீட்டு இன்று அதிகாலை 3 மணியளவில் மலை அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். 

அவரின் உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீஸ் விசாரணையில் இறந்த துரை ஆரணியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனத் தெரிய வந்தது. 

திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story