நாமக்கல் மாவட்டத்தில் 4 இடங்களில் மக்கள் நீதிமன்றம்; அடுத்த மாதம் நடக்கிறது


நாமக்கல் மாவட்டத்தில் 4 இடங்களில் மக்கள் நீதிமன்றம்; அடுத்த மாதம் நடக்கிறது
x
தினத்தந்தி 25 Nov 2021 4:41 PM GMT (Updated: 25 Nov 2021 4:41 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 4 இடங்களில் நடக்கிறது.

நாமக்கல்:
மக்கள் நீதிமன்றம்
நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவகாரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும்.
சமரச முறையில் தீர்வு
மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் யாருக்காவது நீதிமன்றத்தில் மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story