காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றபோது மாயமான தொழிலாளி பிணமாக மீட்பு


காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றபோது மாயமான தொழிலாளி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 4:41 PM GMT (Updated: 25 Nov 2021 4:41 PM GMT)

குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்று மாயமான தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.

குமாரபாளையம்:
தொழிலாளி மாயம்
குமாரபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவர் காவிரி ஆற்றில் வெடி வைத்து மீன் பிடிப்பது வழக்கம். அதேபோல் கடந்த 22-ந் தேதி காவிரி ஆற்றுக்கு மீன் பிடிக்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி அவருடைய மனைவி லட்சுமி குமாரபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சமயசங்கிலி பகுதியில் காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரைகளுக்கு இடையே லட்சுமணம் உடல் மிதந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியானது எப்படி?
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மீன்களை பிடிக்க லட்சுமணன் வெடியை பற்ற வைத்தபோது, அது எதிர்பாராத விதமாக வெடித்ததில் அவரது கை சிதறியதும், ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் மயங்கி காவிரி ஆற்றில் விழுந்து பலியானதும் தெரியவந்தது. தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
குமாரபாளையம் அருகே மீன் பிடிக்க சென்ற தொழிலாளி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story