ரெயில்பாதை மின்மயமாக்கும் பணி நிறைவு


ரெயில்பாதை மின்மயமாக்கும் பணி நிறைவு
x
தினத்தந்தி 25 Nov 2021 4:58 PM GMT (Updated: 25 Nov 2021 4:58 PM GMT)

மானாமதுரை-ராமநாதபுரம் இடையே ரெயில்பாதை மின்மயமாக்கும் திட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம், 
மானாமதுரை-ராமநாதபுரம் இடையே ரெயில்பாதை மின்மயமாக்கும் திட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
மின்சார ரெயில்
நாடு முழுவதும் உள்ள ரெயில் பாதையை மின்மயம் ஆக்குவதை தங்களின் கனவுத்திட்டமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன்படி நாட்டில் டீசல் ரெயில்களை மின்ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டதன் மூலம் மாசு இல்லா பசுமை சூழலுக்கு வழிவகுத்ததுடன் ரெயில்வே நிர்வாகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. இதனால் அனைத்து ரெயில் பாதைகளையும் மின்ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு வருகிறது. 
இந்த திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து வழித்தடங்களையும் மின் மயமாக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மதுரை - ராமேசுவரம் இடையேயான 161 கிலோ மீட்டர் ரெயில்பாதை மின்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மதுரை - மானா மதுரை இடையே 47 கிலோ மீட்டர் ரெயில்பாதையை கடந்த ஆண்டு முழுமையாக மின்பாதையாக மாற்றி முடிக்கப்பட்டு உள்ளது. 
முழுவீச்சில் பணி
இதன் தொடர்ச்சியாக மானாமதுரை - மண்டபம் இடையே யான 96 கிலோ மீட்டர் தூரத்திலான ரெயில்பாதை மின் பாதையாக மாற்றும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. 9.5 மீட்டர் உயரம் முதல் 10.6 மீட்டர் உயரத்திலான மின் கம்பங்கள் அமைத்து மின் கேபிள்கள் பதிக்கும் பணி இந்த ரெயில்பாதையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 
ராமநாதபுரம் ரெயில் நிலைய பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதிர்வுகளை தாங்கும் வகையிலான தண்டவாளங்கள் மாற்றப்பட்டு உள்ளன. தற்போதைய நிலையில் மானாமதுரை - ராமநாதபுரம் வரையிலான பணிகள் அனைத்தும் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன. மானாமதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான இந்த பணியில் 18 மீட்டர் இடைவெளியில் மொத்தம் 257 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 
சோதனை ஓட்டம்
இதனை தொடர்ந்து விரைவில் இந்த பகுதியில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிகள் முடிவடைந்து உள்ளதை தொடர்ந்து அடுத்தகட்டமாக ராமநாதபுரம் முதல் மண்டபம் வரையிலான பாதை மின்மயமாக்கும் பணி தொடங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  
இதுதவிர பாம்பன் புதிய ரெயில் பாலத்திலும் மின்பாதை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் மதுரை-ராமேசுவரம் வரையிலான ரெயில்பாதை மின்மயமாகிவிட்டால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் புண்ணியதலமான ராமேசுவரத்தை வடமாநிலங்களில் இருந்து இணைக்கும் வகையில் புதிய அதிவேக ரெயில்கள் விட வாய்ப்பு உள்ளதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story