கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைக்க வேண்டும்


கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Nov 2021 5:27 PM GMT (Updated: 25 Nov 2021 5:27 PM GMT)

முகையூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் வேண்டுகோள் விடுத்தார்.

திருக்கோவிலூர், 

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு கொடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் கலந்து கொண்டு பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து கிராமங்களிலும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற இலக்கை எட்ட வேண்டும்.

முழு ஒத்துழைப்பு 

குறிப்பாக முகையூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். 
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், முகையூர் ஒன்றியக்குழு துணை தலைவர் மணம்பூண்டி பி.மணிவண்ணன், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், சாம்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் சுகுமாரன் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story