தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: இதுவரை 1,016 பேரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: இதுவரை 1,016 பேரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை
x
தினத்தந்தி 25 Nov 2021 5:41 PM GMT (Updated: 25 Nov 2021 5:41 PM GMT)

இதுவரை 1,016 பேரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணைஇதுவரை 1,016 பேரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை

தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை 1,016 பேரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து உள்ளது.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே நடந்த 31 கட்ட விசாரணையில் 979 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 32-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு தாசில்தார்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர்கள் உள்பட 41 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
விசாரணை
அதன்படி தாசில்தார்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், துப்பாக்கியால் சுட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று வரை நடந்த இந்த விசாரணையில் மொத்தம் 40 பேர் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
ஒருநபர் ஆணையம் விசாரணைக்காக இதுவரை 1,393 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. மொத்தம் 1,016 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. அடுத்தக்கட்ட விசாரணை அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது.

Next Story