தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 25 Nov 2021 6:36 PM GMT (Updated: 25 Nov 2021 6:36 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பொது கிணறு பயன்பாட்டிற்கு வருமா? 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், உத்திரக்குடி கிராமத்தில்  ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் அரசு சார்பில் பொது கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கிணறு பழுதடைந்து தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் இந்த கிணறு பொதுமக்கள் பயன்பாடு இன்றி உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஜீவா, உத்திரக்குடி, அரியலூர். 

குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீர் 
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர்பந்தல் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் இப்பகுதியில் பெய்யும்  மழைநீர் வெளியேற வழியின்றி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளன. இந்த மழைநீர் வடிய வழியின்றி பல நாட்களாக தேங்கி நிற்பதினால் இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுரேஷ், தண்ணீர்பந்தல், பெரம்பலூர். 
இதேபோல் அரியலூர் மாவட்டம், திருமனூர் ஒன்றியம், ஏலாக்குறிச்சி ஊராட்சி கரையான் குறிச்சி கிராமத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சஞ்சய், கரையான்குறிச்சி, அரியலூர். 

குண்டும், குழியுமான சாலை 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, அத்திப்பள்ளத்தில் இருந்து  பள்ளிக்கூடத்தான் பட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதினால் அதன் ஆழம் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை அவற்றில் வாகனத்தை விடும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரவி, அத்திப்பள்ளி, புதுக்கோட்டை. 
இதேபோல் கரூர் மாவட்டம், காந்திகிராமம் 37-வது வார்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கிழக்குப்பகுதியில் உள்ள 3 தெருக்களில், ஒரு தெருவில் மட்டும் சாலை போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 தெருக்களில் சாலை போடாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காந்திகிராமம், கரூர். 

கழிப்பிட வசதி வேண்டும்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் நான்கு ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் சிறுநீர், இயற்கை உபாதை கழிக்க நகராட்சி கழிப்பிடம் ஏதும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்களில் சிலர் திறந்த வெளியை பயன்படுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பயன்படுத்த கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சாதிக் பாட்சா, பெரம்பலூர்.

கழிவறைக்கு செல்ல சிரமப்படும் குழந்தைகள் 
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஒன்றியம், கடையக்குடி ஊராட்சி, வலையம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் குழந்தைகள் கழிவறைக்குச் செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் கழிவறைக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வலையம்பட்டி, புதுக்கோட்டை. 

சாலை வசதி வேண்டும் 
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் ஊராட்சி மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சி ஆகும். இங்கு சுமார் 22 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள பிரதான சாலையான ரஹ்மத் நகர் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏதேனும் சாலை மறியல் மற்றும் பழுது போன்றவை ஏற்பட்டால் இந்த சாலையை தான் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும். ஆனால் இந்த சாலை தற்போது மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ரஹ்மத்நகர், புதுக்கோட்டை. 

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், மணப்பாறை  நகராட்சிக்கு உட்பட்ட 24-வது  வார்டு வெள்ளைக்கல் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீர் வடிய வழியின்றி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளன.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மணப்பாறை, திருச்சி. 
இதேபோல் திருச்சி மாவட்டம், அரியமங்கலம், காமராஜ் நகர் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் இப்பகுதியில் பெய்யும் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சதீஸ்குமார், காமராஜ் நகர், திருச்சி.

சீர்கேடாக காணப்படும் சந்தை 
திருச்சி பொன்மலை சந்தையில் அனைத்து கடைகளுக்கும் கட்டணம் வசூலித்தும் எந்த பராமரிப்பும் இன்றி உள்ளது. மேலும் குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. சந்தை பகுதி தாழ்வாக உள்ளதால் மழைநீர் தேங்கி நிற்கின்றன. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பொன்மலை, திருச்சி. 

ஆபத்தான மின்மாற்றி 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், நடுஇருங்களூரில் உள்ள தெற்கு பிள்ளையார் கோவில் அருகில் சாலையோரத்தில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதனை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நடுஇருங்களூர், திருச்சி. 

சேறும், சகதியுமான சாலைகள்
திருச்சி மாவட்டம்,  முசிறி வட்டம், பெரமங்கலம் ஊராட்சியில் உள்ள மங்கம்மாள்  சாலை  தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வடிகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெரமங்கலம், திருச்சி. 
இதேபோல் திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரநகர் புதிய ரேஷன் கடை பக்கத்து சாலை, சீனிவாசநகர் 5-வது தெரு ஆகியவை மழையில் காரணமாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராமலிங்கம், எடமலைப்பட்டிபுதூர், திருச்சி. 

சாலையை பாதி மறித்து அமைக்கப்பட்டுள்ள தடுப்பு
திருச்சி மாநகராட்சி 53-வது வார்டு உய்யக்கொண்டான் திருமலை கொடப்பு சாலையில் கல்லாங்காடு தெரு முனையில் உள்ள  சிமெண்டு சாலையை பாதி மறைத்த அளவில் மாநகராட்சி சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.  இதனால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
முருகேசன், கல்லாங்காடு, திருச்சி.

பயனற்ற பயணிகள் நிழற்குடை 
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படாததால் இந்த பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை மதுப்பிரியர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிலர் பஸ் நிலையத்திலேயே படுத்துக்கொண்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை பொதுமக்கள் பயன்பாடு இன்றி உள்ளது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
திருச்செல்வம், ரெயில்நகர், திருச்சி. 

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு   
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தா. பேட்டை ஒன்றியம், காருகுடி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் மழை மற்றும் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீர் அருகில் உள்ள குடிநீர் குழாயில் கலந்து நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த தெருவில் வசித்து வரும் மக்கள் தங்களது வீடுகளுக்கு இந்த கழிவுநீரை மிதித்து கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.  
பொதுமக்கள், காருகுடி, திருச்சி. 


Next Story