வேதா இல்லம் அரசுடைமை செல்லாது என்ற உத்தரவு: அட்வகேட் ஜெனரலுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை அமைச்சர் பேட்டி


வேதா இல்லம் அரசுடைமை செல்லாது என்ற உத்தரவு: அட்வகேட் ஜெனரலுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை  அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 25 Nov 2021 6:46 PM GMT (Updated: 25 Nov 2021 6:46 PM GMT)

அட்வகேட் ஜெனரலுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடான வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆஜராகியுள்ளார். அவரின் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதாக மதுரையை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தற்போது வழக்கு தொடர்ந்தவரே வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். உரிய ஆதாரங்களை அரசிடம் சமர்ப்பித்தால் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் துறை ரீதியாக நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். சிறைத்துறையில் ஒதுக்கப்படும் நிதி அனைவருக்கும் தெரியும். அதனால் அந்த அளவிற்கான ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது. சிறைத்துறை பணியாளர்களுக்கு 100 சதவீதம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டது. சிறைக்கு வரும் கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகு தடுப்பூசி செலுத்திய பிறகு தான் அவர்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story