தொல்லியல் சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவர்கள்


தொல்லியல் சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவர்கள்
x
தினத்தந்தி 25 Nov 2021 7:22 PM GMT (Updated: 25 Nov 2021 7:22 PM GMT)

நெல்லை அருகே அரசு பள்ளி மாணவர்கள் தொல்லியல் சுற்றுலா சென்றனர்.

நெல்லை:
உலக மரபு வாரவிழா நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தியது.
அதன் ஒருபகுதியாக நெல்லை அருகே உள்ள கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொல்லியல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். தலைமை ஆசிரியர் சுந்தரம் தலைமை தாங்கினார். ஆண்டிச்சிப்பாறை குடைவரைக் கோவில், மறுகால்தலை தமிழ் கல்வெட்டு, சமணப்படுக்கை, கிருஷ்ணாபுரம் கலைக்கோவில், ஆதிச்சநல்லூர் அகழாய்வுக் களம் ஆகிய தொல்லியல் தளங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் சங்கரநாராயணன் கருத்துரை பேசினார். தொல்லியல் தளங்களின் வரலாற்றையும், தொன்மையினையும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் விளக்கி உரையாற்றினார்.
அப்போது அவர், “முந்தையகால மனிதர்கள் விட்டுச்சென்ற பழம் பெருமைமிக்க வரலாற்றுப் பொருட்களையும், இடங்களையும் நாம் அறிந்துகொண்டு மற்றவர்களுக்கும் அதுபற்றி விளக்கவேண்டும். அவற்றை பாதுகாப்பதிலும், நமக்குப் பின்வரும் அடுத்த தலைமுறையினருக்கு ஒப்படைப்பதிலும் நம் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது" என்றார். நிகழ்ச்சியில், மாணவர்களுடன் கடம்பன்குளம் பள்ளி ஆசிரியர்கள் முத்தரசி, மாரிச்செல்வி, தியோல் ஜோஸ்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Next Story