ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட வணிக வளாகம் திறக்கப்படுமா?


ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட வணிக வளாகம் திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 25 Nov 2021 8:08 PM GMT (Updated: 25 Nov 2021 8:08 PM GMT)

சிவகாசி பஸ் நிலையத்தில் ரூ.2 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள்எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி, 
சிவகாசி பஸ் நிலையத்தில் ரூ.2 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
விரிவாக்க பணி
சிவகாசி நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்துக்கு தினமும் 250-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கிறது. இந்த நிலையில் பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை என்ற காரணத்தை கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்ய அப்போதைய சிவகாசி நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. 
இதற்காக பஸ் நிலையத்தில் இருந்த ஒரு பகுதியை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். அகற்றப்பட்ட இடத்தில் 16 கடைகள் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடைகள் அகற்றப்பட்ட இடத்தின் தெற்கு பகுதியில் ஒரு புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு அதில் அகற்றப்பட்ட இடத்தில் கடைகள் நடத்தியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. பின்னர் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் இடைவெளி நிரப்புதல் நிதி 2015-2016-ல் பஸ்நிலையம் அபிவிருத்திப்பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் புதிய வணிக வளாகங்கள் கட்ட திட்ட மிடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. 
வணிக வளாகம் 
இவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் புதியவர்களுக்கு வழங்க முடிவு செய்தது. 
இதற்கு பலதரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து இந்த வணிக வளாகம் வியாபாரிகள் வசம் ஒப்படைக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்த கடைகள் மூலம் சிவகாசி மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வணிக வளாகத்தை வணிகர்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story