500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Nov 2021 8:12 PM GMT (Updated: 25 Nov 2021 8:12 PM GMT)

35 கடைகளில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தா.பழூர்:

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ் மற்றும் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து தா.பழூர், கோட்டியால், சுத்தமல்லி, விக்கிரமங்கலம், உதயநத்தம் ஆகிய கிராமங்களில் உள்ள பல்வேறு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தா.பழூர் கடைவீதியில் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 16 கடைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 600 அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும் உதயநத்தம் கிராமத்தில் 2 கடைகளுக்கு ரூ.500, கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள ஒரு கடைக்கு ரூ.200, கோட்டியால் கிராமத்தில் 4 கடைகளுக்கு ரூ.800, ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் 2 கடைகளுக்கு ரூ.700, விக்கிரமங்கலம் கிராமத்தில் 5 கடைகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய், சுத்தமல்லி கிராமத்தில் 5 கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்
பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடைபெற்ற கடைகளில் இருந்து மொத்தம் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒன்றியம் முழுவதும் மொத்தம் 35 கடைகளுக்கு ரூ.7 ஆயிரத்து 300 அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், சத்யராஜ், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story