தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Nov 2021 8:26 PM GMT (Updated: 25 Nov 2021 8:26 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

ஆபத்தான பயணம் 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். காலை, மாலை நேரத்தில் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் அளவுக்கு அதிகமான மாணவர்கள் தினமும் பஸ் படிகளில் ஆபத்தான முறையில் தொங்கி கொண்டு செல்கின்றனர். இதனால் மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடையும் சூழ்நிைல உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.
-எ.எம்.மோகனவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.
===
சாலையோர மண் அகற்றப்படுமா?
தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, பொன்னேரி, கெரகோடஅள்ளி மற்றும் காரிமங்கலம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் இருபுறமும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சேறும், சகதியுமாக காணப்படும் மண்ணை அகற்றி சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், தர்மபுரி.
===
கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், வி.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வெளியில் செல்வதில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க முடியும்.
-கோகுல், பரமத்திவேலூர்.
====
நோய் பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் நாழிக்கல்பட்டி பஞ்சாயத்து, அம்பேத்கர் நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு சுமார் 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள இந்த அங்கன்வாடி மையத்தில் தேங்கி நிற்கிறது.  இதனால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு விரைவில் தீர்வு கிடைக்குமா?
-ஜெயபிரகாஷ், நாழிக்கல்பட்டி, சேலம்.

பெயர் பலகை சரி செய்யப்படுமா?
சேலம் அருகே உள்ள சன்னியாசிகுண்டு பிரதான சாலையில் அமைந்துள்ள எஸ்.எம்.சி. காலனி நுழைவு பகுதியில் கோவிந்தசாமி நகருக்கு செல்ல வழிகாட்டும் வகையில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பெயர் பலகை சேதம் அடைந்து கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே அந்த பெயர் பலகையை சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், சன்னியாசிகுண்டு, சேலம். 
===
தேங்கி நிற்கும் மழைநீர்
சேலம் மாநகராட்சி காமராஜ் காலனி செல்வநகரில் மழைநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசுத்தொல்லை அதிகம் உற்பத்தியாகி தொல்லையாக இருக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கிய மழைநீரை அகற்ற முன்வருவார்களா?
-சேவியர் செல்வம், சேலம்.
===
வேகத்தடை வேண்டும்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா பிள்ளாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வண்டிபேட்டை பள்ளி வரை விபத்து பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் அந்த சாலையில் பள்ளி ஒன்றும் அமைந்துள்ளது. வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகிறது. எனவே இங்கு விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வா, கல்லுப்பாளையம், நாமக்கல்.

ஆறாக ஓடும் சாக்கடை கழிவுநீர் 
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலை ஓரத்தில் ஆறாக ஓடுகிறது. இது கடந்த ஒரு மாதகாலமாக சுத்தம் செய்யாமல் இதே நிலையில்தான் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நோய்கள் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும்.
-சுரேஷ்குமார், சந்தைப்பேட்டை, சேலம்.
===

Next Story