கூட்டுறவுத்துறை மூலம் குறைந்த விலையிலான காய்கறி விற்பனை மையங்கள்


கூட்டுறவுத்துறை மூலம் குறைந்த விலையிலான காய்கறி விற்பனை மையங்கள்
x
தினத்தந்தி 25 Nov 2021 8:36 PM GMT (Updated: 25 Nov 2021 8:36 PM GMT)

விருதுநகரில் கூட்டுறவுத்துறை மூலம் குறைந்த விலையிலான காய்கறி விற்பனை மையங்களை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விருதுநகர், 
 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் உத்தரவிற்கிணங்க காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையால் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து காய்கறிகளும் அதிலும் குறிப்பாக தக்காளியும் குறைந்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொது மக்களுக்கு வெளிச் சந்தையில் தற்போது கிலோ ரூ.110 முதல் 130 வரை விற்கப்படும் தக்காளி கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் விற்பனை மையங்கள் மூலம் ரூ.75 முதல் ரூ.100 வரை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை படிப்படியாக உயர்த்தி விற்பனை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, ராஜபாளையம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, ராஜபாளையம் கூட்டுறவு விற்பனைச் சங்கம், சிவகாசி கூட்டுறவு விற்பனை சங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் சிவகாசி காரனேசன் லித்தோ பணியாளர் கூட்டுறவு பண்டகசாலை மூலம் காய்கறி விற்பனை மையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார். விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த விலையிலான தக்காளி மற்றும் காய்கறி விற்பனை மையத்தினை கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டார். இதில் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், கண்காணிப்பாளர்கள் ஜெய்சங்கர், சிரில் சுபாஷ் உள்ளிட்ட கூட்டுறவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story