கனமழையால் வீடுகளை சூழ்ந்த தண்ணீர்; ெவளியே வர முடியாமல் மக்கள் தவிப்பு


கனமழையால் வீடுகளை சூழ்ந்த தண்ணீர்; ெவளியே வர முடியாமல் மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2021 8:06 PM GMT (Updated: 26 Nov 2021 8:06 PM GMT)

கொட்டாம்பட்டி, மேலூர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி, மேலூர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
வீடுகளை சூழ்ந்த மழை நீர்
கொட்டாம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான கருங்காலக்குடி, மங்களாம்பட்டி, பள்ளபட்டி, கச்சிராயன்பட்டி, மாங்குளப்பட்டி, தும்பைபட்டி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று முன்தினம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் கண்மாய், குளம். ஏரிகள் நிறைந்தன. மேலும் கண்மாய்களில் நீர் வெளியேறி மறுகால் பாய்கின்றன. இதுதவிர கனமழையால் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
கொட்டாம்பட்டி மாங்குளப்பட்டியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் 80 வீடுகளை சூழ்ந்தது. இதனால் அங்குள்ள 350 பேர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அரும்பம்பட்டியில் சுமார் 25 வீடுகள் மழை நீரால் சூழ்ந்துள்ளது. அங்குள்ள மொத்தம் 110 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். கச்சிராயன்பட்டியில் தேவிகுளம் நிறைந்து குடியிருப்புகள், விவசாய நிலங்களை சூழ்ந்துள்ளது. அங்கு ஒரு வீட்டின் முன்பு நிறுத்தபட்டிருந்த வேன் நீரில் மூழ்கியது.
வீடு இடிந்தது
ஓட்டக்கோவில்பட்டியில் கனமழையால் அடைக்கன் என்பவரது வீடு இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக தம்பதியினர் காயமின்றி தப்பினர். கருங்காலக்குடியில் உள்ள ஓந்தி கண்மாய் மறுகால் நீர் பாய்ந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகள், பள்ளிவாசல், மர அறுவை மில்லை வெள்ள நீர் சூழ்ந்தது. மங்களாம்பட்டியில் ஊனாங்குண்டு கண்மாய் மறுகால் நீர் புகுந்து விவசாய நிலம் நீரில் மூழ்கியது. சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கொட்டாம்பட்டி பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. பல வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்து நிற்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாங்குளப்பட்டி அரும்பம்பட்டி பகுதிகளை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிர்தவுஸ் பாத்திமா, தாசில்தார் இளமுருகன் உடனிருந்தனர்.
மேலூரிலும் பாதிப்பு
மேலூர் மேலவளவு அருகிலுள்ள கண்மாய்பட்டியில் ஆதி திராவிடர் குடியிருப்பில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 25 வீடுகள் மட்டும் தாழ்வான இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அந்த 25 வீடுகளையும் மழை நீர் சூழ்ந்தது. தகவல் கிடைத்து மேலூர் தாசில்தார் இளமுருகன், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் அங்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு அரசு பள்ளியில் தங்கியிருந்தவர்களுக்கு உணவு வழங்கினர். கனமழையால் மேலூர் பகுதியில் அனைத்து கிராமங்களிலும் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழை தண்ணீரில் சாய்ந்து மூழ்கின.
மேலூரில் உள்ள எம்.மலம்பட்டியில் கணேசன் மற்றும் ராஜா ஆகியோரின் வீடுகள் மற்றும் கிடாரிப்பட்டி, வலையபட்டி உள்பட பல்வேறு இடங்களில் 9 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
தொடர் மழை காரணமாக மதுரை கூடல்புதூரில் உள்ள ஜே.ஜே.நகர் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

Next Story