காரில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சா சிக்கியது; 2 பேர் கைது


காரில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சா சிக்கியது; 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2021 9:10 PM GMT (Updated: 26 Nov 2021 9:10 PM GMT)

புளியரை அருகே தெலுங்கானாவில் இருந்து காரில் 70 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி:
புளியரை அருகே தெலுங்கானாவில் இருந்து காரில் 70 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

தமிழக- கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரையை அடுத்த கோட்டைவாசல் பகுதியில் கேரள மாநிலம் தென்மலை போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தெலுங்கானா பதிவு எண்ணைக் கொண்ட ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அந்த காரில் தெலுங்கானா மாநிலம் ஹயாத்நகர் பகுதியைச் சேர்ந்த செம்பட்டி பிராம்யா (வயது 33), கோலசானிஹரிபாபு (39) ஆகிய 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

70 கிலோ கஞ்சா

இதைத்தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் அவர்களது காரை பரிசோதனை செய்தனர். அப்போது காரின் கதவுகளில் ஏதோ இருப்பது போல் தெரிந்தது. அந்த கதவுகளை கழற்றி பார்த்தபோது அதில் சில பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த பொட்டலங்களை பிரித்து பார்த்தபோது அதில் 70 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

Next Story