கருப்புக்கொடியேந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கருப்புக்கொடியேந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2021 9:12 PM GMT (Updated: 26 Nov 2021 9:12 PM GMT)

மின் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி கருப்புக்கொடியேந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கபிஸ்தலம்;
மின் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி கருப்புக்கொடியேந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
வேளாண் சட்டங்கள்
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாஅரசு,  மூன்று வேளாண் அவசர சட்டங்களை கொண்டு வந்தது.  இதை கண்டித்து லட்சக்கணக்காண விவசாயிகள் டெல்லி எல்லையில் திரண்டு, போராட்டத்தை தொடங்கினர். சமீபத்தில் வேளாண் அவசர சட்டங்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.  இந்த போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், போராட்ட களத்தில் உயிரிழந்த 750-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஏராகரம் கிராமத்தில், உழவன் கூடு விவசாய சங்கம், மற்றும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாசன சங்கத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 
டெல்லிக்கு சென்றனர்
தொடர்ந்து மின் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தியும், விவசாய விளை பொருட்களுக்கு அடிப்படை ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் , நெல்லை கொட்டியும் விவசாயிகள் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாசன சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் தஞ்சை மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் 7 பேர் டெல்லிக்கு புறப்பட்டுசென்றனர். டெல்லியில் அவர்கள் போராட்ட குழுவினரை சந்தித்து நன்றி கூறுகிறார்கள்.

Next Story