என்ஜின் பழுதானதால் நடுவழியில் நின்ற சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்


என்ஜின் பழுதானதால் நடுவழியில் நின்ற சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்
x
தினத்தந்தி 27 Nov 2021 6:00 PM GMT (Updated: 27 Nov 2021 6:00 PM GMT)

குடியாத்தம் அருகே சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில், என்ஜின் பழுதானதால் நடுவழியில் நின்றது. இதனால் ஜோலார்பேட்டை மற்றும் சென்னை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன.

காட்பாடி

குடியாத்தம் அருகே சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில், என்ஜின் பழுதானதால் நடுவழியில் நின்றது. இதனால் ஜோலார்பேட்டை மற்றும் சென்னை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன.

ரெயில் என்ஜின் பழுது

பாட்னாவில் இருந்து பெங்களூரு செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று பகல் 12.20 மணிக்கு வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. 

பின்னர் புறப்பட்டு குடியாத்தம் நோக்கி செல்லும்போது வளத்தூர் அருகே ரெயில் என்ஜின் பழுதானது. 

இதனால் என்ஜின் மேற்கொண்டு  நகர முடியவில்லை. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு அதில் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு சுமார் 1½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. 

ரெயில் என்ஜின் பழுதடைந்து தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றதால் அதிலிருந்த பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.

ஒரு மணி நேரம் தாமதம்

சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் பின்னால் வந்த ரெயில்கள் சுமார் ஒரு மணியில் இருந்து 1.30 மணி நேரம் தாமதமாக சென்றன. 

வளத்தூர் அருகே பழுதான என்ஜின் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்தப் பகுதி ஒரு வழிப்பாதை ஆனது. ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் வளத்தூரை கடந்தபின் சென்னை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் சென்றன.

காட்பாடியில் இருந்து காவனூர் வரை மெயின் லைனிலும் அங்கிருந்து ரெயில்கள் வளத்தூர் வரை லூப்லைனிலும், பின்னர் வளத்தூரில் இருந்து மெயின் லைனிலும் ரெயில்கள் சென்றன.

இதன் காரணமாக ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரெயில்களும் சென்னை மார்க்கமாக செல்லும் ரெயில்களும் சுமார் ஒரு மணியில் இருந்து 1½ மணி நேரம் தாமதமாக சென்றன.

வளத்தூரில் பழுதான ரெயில் என்ஜினை பழுதுபார்க்க ரெயில்வே என்ஜினீயர்கள் வந்துள்ளனர் அவர்கள் ரெயில் என்ஜினை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரெயில்கள் தாமதமாக சென்றதால் அதில் பயணித்த பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள்.

Next Story