காரைக்குடி தம்பதியிடம் கொள்ளையடித்த 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது


காரைக்குடி தம்பதியிடம் கொள்ளையடித்த 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2021 6:56 PM GMT (Updated: 27 Nov 2021 6:56 PM GMT)

காரைக்குடி தம்பதியிடம் கொள்ளையடித்த 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி, 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாக்கோட்டை போலீஸ் சரகம் கண்டனூரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 69). இவரது மனைவி விசாலாட்சி (65). கடந்த ஜூலை மாதம் 3-ந்் தேதி இவர்களை கட்டிப்போட்டு கொள்ளையர்கள்  45 பவுன் தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2½ லட்சம் மற்றும் வைர நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்தநிலையில் மாத்தூர் விலக்கு அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த அசோக்குமார், மகேஷ் ஆகிய 2 பேரை போலீசார் விசாரிக்கும் போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த தங்க நகை குறித்து 2 பேரையும் தனித்தனியாக விசாரித்தனர். இதில் அவர்கள் கண்டனூர் வீட்டில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. தீவிர விசாரணைக்கு பின்னர், கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட பாக்கியலட்சுமி, திட்டம் வகுத்துக்கொடுத்த மஞ்சுளா, கொள்ளையில் ஈடுபட்ட அசோக்குமார், மகேஷ், இவர்களுக்கு உடந்தையாக இருந்த ராமு, தேவகோட்டை பிரபுராஜ், வேலங்குடியை சேர்ந்த அம்சகுமார், ஐங்கரன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். தங்கம், வெள்ளி, வைர நகைகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள நவீன், பந்தள ராஜா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story