கரூரில் ஒரேநாளில் 31 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா தடுப்பூசி


கரூரில் ஒரேநாளில் 31 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 28 Nov 2021 6:45 PM GMT (Updated: 28 Nov 2021 6:45 PM GMT)

கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 31 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கரூர், 
12-ம் கட்ட முகாம்
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 12-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மாவட்டத்தில் மொத்தம் 800 இடங்களில் நேற்று நடைபெற்றது.
முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றன. இதில், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
நொய்யல்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈ.வே.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி, சேமங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குளத்துபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடையனூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, இளங்கோ நகர் அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளிகளில் நடைபெற்ற முகாமிற்கு ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போட்டனர். இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
அதேபோல் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டனர்.
85 சதவீத பேருக்கு தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் கடந்த 27-ந் தேதி வரை முதல் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 15 ஆயிரத்து 810 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 3 லட்சத்து 70 ஆயிரத்து 214 பேரும் என மொத்தம் 10 லட்சத்து 86 ஆயிரத்து 24 பேர் செலுத்தி இருந்தனர்.
நேற்று நடைபெற்ற முகாம்களில் முதல் தவணை தடுப்பூசி 9 ஆயிரத்து 605 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 22 ஆயிரத்து 264 பேருக்கும் என மொத்தம் 31 ஆயிரத்து 869 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் முதல் தவணை தடுப்பூசி 85 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி 46 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.

Next Story