ஒழுங்காக படிக்கும்படி தந்தை கூறியதால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சியில் அக்காளும் உயிரை மாய்த்தார்


ஒழுங்காக படிக்கும்படி தந்தை கூறியதால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சியில் அக்காளும் உயிரை மாய்த்தார்
x
தினத்தந்தி 28 Nov 2021 9:05 PM GMT (Updated: 28 Nov 2021 9:05 PM GMT)

ஹாவேரி அருகே, ஒழுங்காக படிக்கும்படி தந்தை கூறியதால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த அதிர்ச்சியில் அவனது அக்காளும் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

ஹாவேரி:

தூக்குப்போட்டு தற்கொலை

  ஹாவேரி மாவட்டம் பேடகி டவுனை சேர்ந்தவர் சந்துரு சலவாடி. இவருக்கு திருமணம் முடிந்து பாக்யலட்சுமி(வயது 18) என்ற மகளும், நாகராஜ் (15) என்ற மகனும் இருந்தனர். பாக்யலட்சுமி தனது தம்பி நாகராஜ் மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தார். இந்த நிலையில் நாகராஜ் படிப்பில் சரியாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்து உள்ளான்.

  இதனால் சந்துரு, நாகராஜை கண்டித்ததுடன் ஒழுங்காக படிக்கும்படி அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதன்காரணமாக மனம் உடைந்த நாகராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுபற்றி அறிந்த பேடகி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

எம்.எல்.ஏ. உறவினர்

  இந்த நிலையில் நாகராஜ் தற்கொலை செய்தது பற்றி அறிந்ததும் பாக்யலட்சுமி கதறி அழுதார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர். இதற்கிடையே குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த போது தம்பி தற்கொலை செய்த அதே இடத்தில் பாக்யலட்சுமியும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

  அவரது உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தம்பி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் பாக்யலட்சுமியும் உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து பேடகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட நாகராஜ், பாக்யலட்சுமி ஆகியோர் ஹாவேரி பா.ஜனதா எம்.எல்.ஏ. நேரு ஒலேகரின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

Next Story