ஸ்கூட்டரை அடமானம் வைத்து கணவர் மது குடித்ததால் 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை மத்தூர் அருகே சோகம்


ஸ்கூட்டரை அடமானம் வைத்து கணவர் மது குடித்ததால் 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை மத்தூர் அருகே சோகம்
x
தினத்தந்தி 29 Nov 2021 7:23 PM GMT (Updated: 29 Nov 2021 7:23 PM GMT)

மத்தூர் அருகே ஸ்கூட்டரை அடமானம் வைத்து கணவர் மது குடித்ததால் வேதனை அடைந்த தாய் தனது 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மத்தூர்:
மத்தூர் அருகே ஸ்கூட்டரை அடமானம் வைத்து கணவர் மது குடித்ததால் வேதனை அடைந்த தாய் தனது 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
 லாரி டிரைவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கோடிப்பதி பகுதியை சேர்ந்தவர் மாது (வயது 29). லாரி டிரைவர். இவருக்கும், கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜக்கடை பகுதியை சேர்ந்த தீபா (26) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு யோகஸ்ரீமதி (7) என்ற மகள் இருந்தாள். சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
டிரைவரான மாதுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மாது வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் வரும் வ ருமானத்தை மதுகுடித்து செலவு செய்து வந்தார். இதனால் வீட்டு செலவை சமாளிக்க தீபா போச்சம்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு தனது ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று வந்தார்.
கிணற்றில் குதித்து தற்கொலை 
இந்தநிலையில் மாது தனது மனைவியின் ஸ்கூட்டரை மது குடிப்பதற்காக அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் தனது கணவரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மாலையில் தீபா தனது மகள் யோகஸ்ரீமதியை அழைத்து கொண்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றுக்கு சென்றார்.
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த தீபா தனது மகளை கிணற்றில் தூக்கி போட்டு விட்டு, தானும் குதித்தார். இதில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இந்த நிலையில் தீபாவும், யோகஸ்ரீமதியும் கிணற்றில் பிணமாக மிதப்பதை நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கணவர் உள்பட 3 பேர் கைது
இது குறித்து அவர்கள் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தீபா, சிறுமி யோகஸ்ரீமதி ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
அப்போது அங்கு திரண்டு இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீபாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணவர் மாது, இவருடைய தாயார் செல்வி, மாதுவின் தம்பி சதீஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மத்தூர் அருகே மது குடிக்க ஸ்கூட்டரை கணவர் அடமானம் வைத்ததால் மனவேதனையில் குழந்தையுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story