பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை. புதிய போலீஸ் சூப்பிரண்டு பேட்டி.


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை. புதிய போலீஸ் சூப்பிரண்டு பேட்டி.
x
தினத்தந்தி 1 Dec 2021 5:05 PM GMT (Updated: 1 Dec 2021 5:05 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் சூப்பிரண்டாக ராஜேஷ்கண்ணன் நியமிக்கப்பட்டார். அவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம். ஆங்கிலேயர் காலத்திலேயே சிறப்பு வாய்ந்த மாவட்டமாக விளங்கியது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை இதுவரை இருந்த போலீஸ் சூப்பிரண்டுகள் சிறப்பாக கையாண்டு உள்ளனர். அந்த வழியில் எனது பணிகள் தொடரும். வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறேன். அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

வேலூர் மாவட்டத்தில் ரவுடியிசம் கட்டுக்குள் உள்ளது. அது தொடரும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் நலனில் அக்கறை செலுத்தப்படும். இளம்சிறார் குற்றவாளிகள் அதிகரித்து வருகின்றனர். எந்த காரணத்திற்காக அவர்கள் குற்றவாளிகளாக மாறுகிறார்கள். அவர்களை குற்றவாளிகளாக தூண்டுவது எது என்ற காரணங்களை கண்டறிந்து அதனை களைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இளம் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். வேலூர் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர் உள்பட பலர் புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story