திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை


திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 Dec 2021 9:12 PM GMT (Updated: 1 Dec 2021 9:12 PM GMT)

ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

மைசூரு:ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது. 

காதலுக்கு எதிர்ப்பு

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை டவுனை சேர்ந்தவர்கள் சதீஷ்(வயது 26). வரலட்சுமி(22). இவர்கள் 2 பேரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சதீசும், வரலட்சுமியும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், திருமணம் செய்து வைக்கவும் மறுப்பு தெரிவித்தனர். இதனால் சதீசும், வரலட்சுமியும் மனம் உடைந்து காணப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சதீசும், வரலட்சுமியும் வீட்டில் இருந்து வெளியேறினர். பின்னர் 2 பேரும் மைசூருவுக்கு வந்தனர். அங்கு மண்டிமொகல்லா பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து 2 பேரும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் வரை அவர்கள் 2 பேரும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. 

தூக்குப்போட்டு தற்கொலை 

இதனால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஜன்னல் வழியாக ஊழியர்கள் எட்டிப்பார்த்தனர். அப்போது சதீசும், வரலட்சுமியும் தூக்கில் தொங்கினார்கள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் உடனடியாக மண்டிமொகல்லா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று தூக்கில் தொங்கிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் அந்த அறையில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில் நாங்கள் 2 பேரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். ஆனாலும் எங்கள் காதல், திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று சதீசும், வரலட்சுமியும் எழுதி இருந்தனர். இதனால் திருமணத்திற்கு பெற்றோரின்  எதிர்ப்பால் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மண்டிமொகல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story