அயல்நாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு பெண்கள் தேர்வு


அயல்நாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு பெண்கள் தேர்வு
x
தினத்தந்தி 3 Dec 2021 12:05 AM GMT (Updated: 3 Dec 2021 12:05 AM GMT)

குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்காக தமிழக அரசு நிறுவனத்துடன், அயல்நாட்டு நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

சென்னை,

குவைத் நாட்டின் ‘குவைத் கேட் பவுண்டேஷன்’ என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளராக பணிபுரிவதற்கு 30 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண் பணியாளர்கள் 500 பேரை பணியமர்த்தம் செய்ய கடந்த மாதம் 17-ந்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, வீட்டுப்பெண் பணியாளர்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்து அனுபவம் உள்ளவர்களுக்கு மாத ஊதியம் ரூ.32 ஆயிரம் மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.29 ஆயிரத்து 500 வழங்கப்படும். மேலும் மருத்துவ பரிசோதனை கட்டணம், விசா, விமானப் பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி மற்றும் இதர சலுகைகள் குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மாதச் சம்பளம் தவறாமல் வழங்க வேண்டும்.

பெண் பணியாளர்களுக்கு வாய்ப்பு

இந்த ஒப்பந்தம் 2 வருடம் வரை நீடிக்கும். ரத்து செய்யாதபட்சத்தில் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். குவைத் நாட்டின் கலாசார பண்புகள் குறித்த கையேடு பணியாளர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் வழங்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் பணியாளருக்கு ஏதுவான சூழ்நிலை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் அறிய, சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தையோ அல்லது சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தையோ அணுகலாம்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

மேலும் தங்களது சுயவிவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி மற்றும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaidkuwait21@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட வேலைக்கான விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளம் மூலமாகவும், 044-22505886/22500417 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது 17.11.2023 வரை நடைமுறையில் இருக்கும். விருப்பமுள்ள மனுதாரர்கள் இக்காலகட்டத்துக்குள் பதிவு செய்துகொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் நபர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story