‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Dec 2021 4:22 PM GMT (Updated: 3 Dec 2021 4:22 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்தவர் எஸ்.பால்துரை. இவர், கட்டாலங்குளம் பஞ்சாயத்து போப் காலனியில் தெரு குழாய் உடைந்து கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாக செல்வதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதையடுத்து குடிநீர் குழாய் உடைப்பு உடனடியாக சரிசெய்யப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

பழுதடைந்த மின்மோட்டார்
நெல்லை மாவட்டம் அம்பையில் சின்ன சங்கரன்கோவில் ரோடு ஆலடியான் கோவில் எதிர்புறம் மருத்துவர் தெருவில் உள்ள சின்டெக்ஸ் நீர்த்தேக்க தொட்டிக்கான மின்மோட்டார் 2 வருடங்களாக பழுதடைந்து கிடக்கிறது. எனவே மின்மோட்டாரை சரிசெய்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- ரசூல் ராஜா, அம்பை.

கரடுமுரடான பாதை
ராதாபுரம் தாலுகா தனக்கர்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிவசுப்பிரமணியபுரத்தில் சாஸ்தா கோவில் தெருவில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு பாதை கரடுமுரடாக உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தங்ககுமார், சிவசுப்பிரமணியபுரம்.

பயணியர் நிழற்கூடம் தேவை
பாளையங்கோட்டை- தூத்துக்குடி ரோட்டில் அமைந்துள்ள கே.டி.சி.நகர் மின்வாரிய அலுவலகம் அருகேயும், தனியார் பள்ளிக்கூடம் அருகேயும் பஸ்நிறுத்தங்கள் உள்ளன. ஆனால் அங்கு பயணியர் நிழற்கூடம் இல்லாததால் மழையிலும், வெயியிலும் மக்கள் நிற்க வேண்டியுள்ளது. எனவே இருமார்க்கத்திலும் பயணியர் நிழற்கூடம் கட்டிக் கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- ஏ.சந்திரசேகரன், கே.டி.சி.நகர்.

தரைப்பாலத்தை உயர்த்த வேண்டும்
நாங்குநேரி பெரியகுளத்துக்கு அடுத்தபடியாக உள்ள கீழ்குளத்துக்கு தண்ணீர் செல்லும் வழியில் மறுகால்குறிச்சி- நாங்குநேரி சாலையில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலத்தை உயர்த்தி தரமான பாலமாக கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- ஆறுமுகம், நாங்குநேரி. 

சாலைப்பணிகள் விரைவாக முடியுமா?
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் பஞ்சாயத்து உடையாம்புளி கிராமத்தில் மயான சாலை பணியானது கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இறுதி ஊர்வலத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- மு.மனோஜ்குமார், உடையாம்புளி.

சாலையின் நடுவே மின்கம்பம்
கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து வடக்கு புதுமனை தெருவில் அமைந்துள்ள மின்கம்பமானது, மக்கள் நடந்து செல்லும் சாலையின் நடுவே உள்ளது. இதனால் பள்ளி வாகனங்கள், மாணவர்களை ஏற்றிச் செல்ல முடியவில்லை. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட அந்த தெருவில் செல்ல முடியாமல் மின்கம்பம் தடையாக உள்ளது. புதிதாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள், மின்கம்பம் இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் அவல நிலையும் தொடருகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- கோதர் மைதீன், முதலியார்பட்டி.

கொசு தொல்லை
சங்கரன்கோவில் தாலுகா களப்பாகுளம் பஞ்சாயத்து என்.ஜி.ஓ. காலனியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே கொசு மருந்து அடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- முத்துப்பாண்டி, என்.ஜி.ஓ. காலனி.

ரோடு மோசம்
செங்கோட்டை தாலுகா இலத்தூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் அருகே தென்காசி செல்லும் நெடுஞ்சாலை ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.எஸ்.முகம்மது, அச்சன்புதூர்.

வீடுகளை சூழ்ந்த மழைநீர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பாரதியார் தெருவில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியவில்ைல. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. எனவே மழைநீரை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டுகிறேன்.
- சிவா, திருச்செந்தூர்.

Next Story