மழைநீரை அகற்றக்கோரி காங்கிரசார் சாலை மறியல்


மழைநீரை அகற்றக்கோரி காங்கிரசார் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Dec 2021 5:51 PM GMT (Updated: 3 Dec 2021 5:51 PM GMT)

மழைநீரை அகற்றக்கோரி காங்கிரசார் சாலை மறியல்

கொல்லங்கோடு, 
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நித்திரவிளை அருகே உள்ள ஏழுதேசம் பேரூராட்சியில் கிராத்தூர் வலியமக்குளி, மணவிளை போன்ற பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இந்த தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று ஊர் பொதுமக்கள் மற்றும் காங்கிரசார் சேர்ந்து நித்திரவிளை வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் தலைைம தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் கோபன், ஜான் பெனடிக்ட், கட்சி நிர்வாகி ஜெஸ்டின் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த நித்திரவிளை மற்றும் கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று  பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பாராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story