மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது; தலைமறைவான 4 பேருக்கு வலைவீச்சு


மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது; தலைமறைவான 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Dec 2021 6:36 PM GMT (Updated: 3 Dec 2021 6:36 PM GMT)

குளித்தலை அருகே மூதாட்டியை தாக்கி 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவான 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குளித்தலை, 
மூதாட்டி மீது தாக்குதல்
குளித்தலை அருகே உள்ள பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவி பாப்பா (வயது 70). இவர்களுக்கு சங்கப்பிள்ளை, முனியாண்டி என்ற மகன்களும், சரசு என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சங்கபிள்ளை (45), அவரின் மகன்களான பொன்னர் (19), ரெங்கர் (21) ஆகியோர் மூதாட்டி பாப்பாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கொலைமிரட்டல்
இதனை அறிந்த சரசு தனது தாயை நடுப்பட்டி பாலம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார். சம்பவத்தன்று நடுப்பட்டி பாலம் பகுதிக்கு வந்த சங்கபிள்ளை, தனது மனைவி தங்கமணி (40), மகன்கள் பொன்னர், ரெங்கர் மற்றும் பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த அவர்களது உறவினர்களான சத்குரு (30), வினோத் (22), அஜித் (23) ஆகியோர் மூதாட்டி பாப்பாவை தாக்கியுள்ளனர்.
இதைதடுக்க வந்த பாப்பாவின் தம்பியான செல்வம் (45), மகன் முனியாண்டி, மகள் சரசு, சரசுவின் கணவர் துரையப்பன் ஆகியோரையும் அவர்கள் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
3 பேர் கைது
இதில் காயமடைந்த அனைவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பின்னர் மூதாட்டி பாப்பா, செல்வம் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து செல்வம் அளித்த புகாரின்பேரில் சங்கபிள்ளை, தங்கமணி, பொன்னர், சங்கர், சத்குரு, வினோத், அஜித் ஆகிய 7 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சத்குரு, வினோத், அஜித் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story