ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 மணி நேரம் பலத்த மழை


ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 மணி நேரம் பலத்த மழை
x
தினத்தந்தி 3 Dec 2021 7:27 PM GMT (Updated: 3 Dec 2021 7:27 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. 
வெள்ளம் சூழ்ந்தது 
ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று முன்தினம் இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் அனைத்து கண்மாய்களும் நிறைந்து உள்ளன. ஒரு சில கண்மாய்கள் நிறையும் தருவாயில் உள்ளது. 
 இதனால் பெரியகுளம் கண்மாய், மொட்டப்பத்தான் கண்மாய், வடமலை குறிச்சி போன்ற பகுதிகளில் உள்ள  கண்மாய்கள் திறக்கப்பட்டன. மடை திறந்ததால் வெள்ளநீர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டென் பட்டி, அத்திக்கடை, குலாலர் தெரு, ஓட்டமடம் தெரு, கல்லணை தெரு, மாதா நகர் போன்ற பகுதிகளில் 2 ஆயிரம் வீடுகளை சூழ்ந்தது. இரவு நேரத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் தங்கள் உடமைகளுடன் குலாலர் தெரு திருமண மண்டபத்திலும், பள்ளியிலும் தஞ்சமடைந்தனர். 
கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது 
 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவினை ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான் ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், வர்த்தக அணி செயலாளர் முருகன், தாசில்தார் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் வழங்கினர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் ஓடையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் கோவிலில் முழங்கால் அளவு வெள்ளநீர் சூழ்ந்து கோவிலுக்குள் புகுந்தது, இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத அளவிற்கு தண்ணீர் நிரம்பி இருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நீராடிய திருமுக்குளத்திற்கு தண்ணீர் வராமல் இருந்தது. இதையொட்டி தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் நிர்வாகம் செய்தது. இந்தநிலையில் மொட்டை பத்தான் கண்மாயில் இருந்து  திருமுக்குளத்திற்கு தண்ணீர் வந்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெள்ள நீர் அனைத்தும் கொஞ்சம், கொஞ்சமாக வடிய தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் சுற்றுச்சுவர் சரிவு ஏற்பட்டு விழுந்தது.

Related Tags :
Next Story