மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது - சிறையில் இருந்து வெளிவந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம்


மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது - சிறையில் இருந்து வெளிவந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம்
x
தினத்தந்தி 4 Dec 2021 12:20 AM GMT (Updated: 4 Dec 2021 12:20 AM GMT)

பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலமானது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக பெரும்பாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிராங்-டி-ரூபன் உத்தரவின் பேரில் பெரும்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கனகதாசன் தலைமையில் தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த தனிப்படையினர் திருட்டு சம்பவம் நடைபெற்ற குடியிருப்பு அருகில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

தனிப்படை போலீசார்

இதைத்தொடர்ந்து, மோட்டார் சைக்கிள்களை திருடியவர்களின் உருவம் பதிந்த சி.சி.டி.வி. காட்சிகளை பரிசோதித்த போது, அதில் ஒருவர் ஏற்கனவே அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் சிறை சென்றது உறுதியானது.

இதையடுத்து தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விஸ்வான் (21) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், விஸ்வான் சென்னையில் தங்கி வேலை செய்வது போல் நடித்து தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாகவும் காஞ்சீபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வழக்குகளில் கடந்த 10 மாதங்களாக சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், சென்னை பள்ளிக்கரணை, சேலையூர், மாதவரம், சிவகாஞ்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விஸ்வான் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

உல்லாச வாழ்க்கை

மேலும், போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், சிறையில் இருந்தபோது மேடவாக்கத்தை சேர்ந்த கொலை வழக்கில் தொடர்புடைய சூரமணி என்பவரின் உதவியுடன் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மேடவாக்கம் சுற்றுவட்டார பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடி, அதை விற்று கஞ்சா, பெண் என உல்லாசமாக வாழ்ந்ததையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இவரிடம் இருந்த 6 விலையுர்ந்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்த பெரும்பாக்கம் போலீசார், பின்னர் விஸ்வானை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story